சனத்குமாரர்

பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களின் கதை அனைவருக்கும் தெரிந்தது. பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற இந்த நால்வரும் சிவனிடமிருந்து மௌன உபதேசம் பெற்றவர்கள். இதில் சனத்குமாரர் ஒரு பிரம்ம ஞானி. உண்மையை உணர்ந்தவர்.

இந்த சனத்குமாரருக்கு ஒருநாள் ஒரு கனவு வந்தது. நம்மைப் போல கண்டதை விழுங்கிட்டு கண்ட கண்ட சினிமாவையும் பார்த்து வந்த கனவில்லை இது. ஒரு பிரம்ம ஞானிக்கு வந்த கனவு என்றால் சும்மாவா? அதில் சனத்குமாரர் தேவர் படைக்கு தலைமை தாங்கி அசுரர்களை அழிப்பதாகக் கண்டார். அவருக்கு ஒரே அதிசயம்! என்னடா நாம இப்படி கனவு காண்றமே என்றுதான். பிரம்ம ஞானிக்கு தேவர், அசுரர் எல்லாம் ஒன்றுதானே. இதில் ஒருவருக்காக ஒருவரை அழிப்பது எதற்காக?

நேராக அப்பாவிடம் போய் விஷயத்தைச் சொன்னார் - அதுதான் பிரம்மாவிடம். அவரும் இது ஒரு ஞானி கண்ட கனவாயிற்றே, நிச்சயம் பலிக்கும் என்றார். இப்போது நீ ஞானியாக எல்லாம் ஒன்றுதான் என்று இருந்தாலும், இதற்காக மறுபிறப்பு ஒன்று எடுத்தாவது இதைச் செய்வாய் என்று கூறினார் பிரம்மா. சனத்குமாரருக்கு பிறப்பு, இறப்பு என்பதைப் பற்றித்தான் கவலையே இல்லையே! அவர் தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார். அதாவது தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலேயே நிலைத்துவிட்டால், அப்படிப்பட்டவருக்கு அவரறியாமலேயே ஒரு சக்தி வந்துவிடும். அவர் சத்தியத்தையே சொன்னது போக, அவர் சொல்வதெல்லாம் சத்தியமே என்ற நிலை வந்துவிடும். அவர் தவறுதலாக உண்மைக்கு விரோதமான ஒன்றைச் சொன்னால்கூட அது உண்மையிலேயே நடந்துவிடும்.

சனத்குமாரர் கனவை மறந்துவிட்டு தியானத்தில் அமர்ந்துவிட்டாலும், அவரது கனவைப்பற்றி இன்னொருவர் கவலைப்பட்டார்! அவர்தான் பரமசிவன். அந்தக் கனவு பலிக்கவேண்டுமே என்ற கவலையில் சனத்குமாரர் அழைக்காமலே அவர்முன் வந்து நின்றார். உடலை வருத்தி அவரைத் தரிசிக்க வேண்டுமென்று பலர் தவம் செய்ய, அப்படி ஒரு வேண்டுதலே செய்யாத சனத்குமாரரின் முன் வந்து நின்றார்.

இந்தப் பரமசிவன் இருக்கிறாரே அவர் ஒரு வித்தியாசமான பேர்வழி! யார் தன்னை நோக்கி மிகவும் கடுமையாகத் தவம் செய்தாலும் அவர்களைச் சோதித்துப் பார்க்காமல் வரம் கொடுக்கமாட்டார். ஆனால் இப்படி இவர் அழைக்காமல் வந்து நின்றதும் இவருக்கே சோதனை வந்தது சனத்குமாரர் மூலம். வந்து நின்றவரைக் கவனிக்கவே இல்லை சனத்குமாரர்!
பரமசிவன் கோபமாக நெற்றிக்கண்ணைத் திறந்து........
......பார்த்தாலும் எரிஞ்சிருக்க மாட்டாரோ என்னவோ......
ஆனால் அப்படி ஒன்றுமில்லை. வேறு என்னதான் நடந்தது.........?

பரமசிவனும் கால் வலிக்க வலிக்க நின்று பார்த்தார். அவரோ கண்ணைத் திறக்கிற வழியாகக் காணோம். பொறுமையிழந்துபோன பரமசிவன், "சனத்குமாரா" என அழைத்தார். அப்போதுதான் மெதுவாகக் கண்களைத் திறந்தார் சனத்குமாரர். திறந்து எதிரில் நின்ற பரமசிவனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, விழுந்து வணங்கி.......... ம்ஹும் எதுவுமே கிடையாது. அவர் பாட்டுக்கு கண்ணைத்திறந்து, "என்ன?" என்பதுபோல் பரமசிவனைப் பார்த்தார். எல்லாமே பிரம்மம் என்றபின் யார் யாரை வணங்குவது?

பரமசிவனுக்கு இப்படி ஒரு ஞானியைப் பார்த்து சந்தோஷம்தான் என்றாலும், அவருடன் கொஞ்சம் விளையாட எண்ணி, "நான்தான் பரமேஸ்வரன் வந்திருக்கிறேன்" என்றார். "அதற்கு இப்போது என்ன" என்றார் சனத்குமாரர். "சர்வேஸ்வரனான என்னைப் பார்த்தும் மரியாதை செலுத்தாமல் இருக்கிறாயே, நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?" என்றார் ஈஸ்வரன். சனத்குமாரரோ அலட்சியமாக, "வேண்டுமானால் சாபம் கொடுத்துத்தான் பாருமேன். அதனால் ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது" என்றார். பரமேஸ்வரனுக்கு பிரம்மா மேல் கொஞ்சம் பொறாமையும் வந்திருக்குமோ என்னவோ? இப்படி ஒரு ஞானியைப் பிள்ளையாகப் பெற்றிருக்கிறாரே என்று. இல்லாவிட்டால் இப்படி ஒரு வரம் பெற்றிருப்பாரா?

பரமசிவனும், "சரி நீ ஒரு சிறந்த ஞானிதான். உனக்கு என்ன வரம் வேண்டும்? எதுவானாலும் கேள் தருகிறேன்" என்றார். "நீரே கூறிவிட்டீரே ஞானி என்று, இனி வரத்திற்கு என்ன தேவை இருக்கிறது?" என்றார் சனத்குமாரர். பரமசிவனோ விடுவதாக இல்லை. "நான் தரிசனம் கொடுத்தபின் வரம் கொடுக்காமல் திரும்புவதில்லை. நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகவேண்டும்" என்றார். சனத்குமாரரோ வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தார். கடைசியில், "நீர் இப்படி பிடிவாதம் பிடிப்பதைப் பார்த்தால் உமக்குத்தான் வரம், சாபம் என்பதிலெல்லாம் நம்பிக்கையுண்டு போலிருக்கிறது. சரி உமக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேளும் தருகிறேன்" என்று பரமசிவனிடமே கூறினார் சனத்குமாரர்!

பரமசிவனும் விடவில்லை. "மஹா ஞானியான நீ எனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும்" என்று கேட்டார். சனத்குமாரருக்கோ பிறப்பு இறப்பு என்பதைப் பற்றித்தான் கவலையே இல்லையே! அவரும் சம்மதித்துவிட்டார். அதோடு ஒரு நிபந்தனையும் இட்டார். "நீர் மட்டும் தான் என்னிடம் வரம் கேட்டீர். நானும் உமக்குப் பிள்ளையாகப் பிறப்பதாகத்தான் சொன்னேன். அதனால், நீர் மட்டும் என்னை எப்படித் தோற்றுவிக்க முடியுமோ அப்படிச் செய்துகொள்ளும்" என்று சொல்லிவிட்டார். பார்வதி தேவிக்கு வருத்தமாக இருந்தாலும் கொடுத்த வரத்தை மாற்ற முடியாதே. வேறு வழியின்றி சம்மதித்தார்.

சனத்குமாரர் கொடுத்த வரத்தின்படியே பரமேஸ்வரனின் ஆறு முகங்களிலிருந்தும் ஜோதி ஸ்வரூபமான ஷண்முகனாக அவதரித்தார். பார்வதி தேவியே சரவணப் பொய்கையாக அமைந்து அந்த ஷண்முகனைத் தாங்கினார். இப்படி இந்தப் பிரம்ம ஞானி பரமேஸ்வரனுக்குப் பிள்ளையாகப் பிறந்தது மட்டுமல்ல பின்னால் தான் முன்பு பரமேஸ்வரனிடம் பெற்ற உபதேசத்தை அந்த பரமேஸ்வரனுக்கே குருவாக அமர்ந்து உபதேசித்தார்!

Comments

Post a Comment