எல்லாம் அற என்னை இழந்த நலம்...

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே.

கந்தர் அனுபூதியில் உள்ள உயர்ந்த பாட்டுக்களில் ஒன்று இதுவெனக் குறிப்பிடுகிறார் வாரியார் சுவாமிகள். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியில் இரண்டாவது பாடலான இதற்கு வாரியார் சுவாமிகளின் விளக்கவுரை இப்படி அமைகிறது...

இங்கு எல்லாம் அற என்பதற்கு மெய், வாய், நாசி, செவி, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் முதலியவைகள் அற்று என்பது பொருள்.

'எல்லாம்' என்பது புறப்பற்று. 'என்னை' என்பது அகப்பற்று. என்றைக்கு இந்த அகப்பற்றும், புறப்பற்றும் ஒழிகின்றனவோ, அன்றைக்குத்தான் நலம் பெறுவோம்.

ஞான பண்டிதனை வேண்டுகின்றபோழுது 'மனம், வாக்கு, காயம்' ஒன்றுபட்டு 'என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா' என்கின்றார் யோக நிலையிலிருந்து அருணகிரிநாதர். அதாவது கண்ணிருந்து காணவில்லை. காதிருந்து கேட்கவில்லை. நாசி இருந்து நுகரவில்லை. நாக்கு இருந்து சுவைக்கவில்லை. மனம் சிந்திக்கவில்லை. புத்தி நிச்சயிக்கவில்லை. சித்தம் எதையும் எண்ணவில்லை, அஹங்காரம் கொண்டெழுப்பவில்லை. வெறும் தனி நிலை அது.

உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோதனும் நீ அலையோ, இங்கு 'உல்லாசம்' என்ற சொல்லுக்குப் பொருள் எந்தக் காலத்திலும் மாறுபாடு இல்லாமல் ஒரு தன்மையாக இருத்தல்; அதாவது புத்தியில் சஞ்சலமில்லாமல் இருப்பது; ஏற்றத் தாழ்வு இல்லாத வாழ்வு.

'நிராகுல' என்றால் துன்பம் இல்லாதவன். அதாவது ஞான மயமானவன் என்று அர்த்தம். இதற்கு நேர் அர்த்தம் அறிவு வடிவானவன். அறிவுள்ளவனுக்குத் துன்பம் இருக்காது. அறிவில்லாதவன் துன்பத்தை அடைவான். அறிவில்லாதவனுக்கு மேலும் மேலும் துன்பங்கள் இருந்துகொண்டேதானிருக்கும். அறிவிருப்பவனுக்குத் துன்பம் நேரும். ஆனால் துன்பத்தை அடையமாட்டான். அறிவிலே தெளிவு இருந்தால் துன்பம் வராது. இன்பத்திற்குக் காரணம் அறிவு.

'யோக' : யோகத்தால்தான் இன்பம் வரும். கணவனும், மனைவியும் ஒன்றுபட்டால் சிற்றின்பம். ஆன்மாவும், இரையும் ஒன்றுபட்டால் பேரின்பம். இரண்டு காட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் இன்பம்.

'உல்லாசம்' என்றால் உண்மை; அதாவது 'சத்து'; 'நிராகுல' என்றால் அறிவு; அதாவது 'சித்து'; 'யோகம்' என்றால் இன்பம்; அதாவது 'ஆனந்தம்'; 'சத்து', 'சித்து', 'ஆனந்தம்' சச்சிதானந்தம். 'சச்சிதானந்தமாகிய கடவுளே' என்று பொருள்.

'இதம்' என்றால் நினைவு. அதாவது நினைத்தல்; 'சல்லாபம்' என்றால் பேசுதல்; 'விநோதம்' என்றால் செய்தல். சத்தும், சித்தும், ஆனந்தமுமாய், அதாவது சச்சிதானந்த வடிவமாக இருக்கும் ஆண்டவன், இதம், சல்லாபம், வினோதன், அதாவது, நினைத்தல், பேசுதல், செய்தல் ஆகிய இந்த மூன்றும் நமக்கு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறான், சச்சிதானந்தம் வேண்டுமென்று நினைக்கிறான். ஆண்டவன் உண்மை வடிவாயிருந்து நமக்கு எல்லாம் செய்கின்றான்.

'உல்லாச நிராகுல யோக...' இதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு.

  1. உல்லாசம் என்றால் என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது. அதுதான் மேலானது. அதற்க்கு மேலானது ஒன்றும் கிடையாது. மேலான மலை எது? அதுதான் திருப்பரங்குன்றம். அதுவே மூலாதாரம்; அதாவது உல்லாசம்.
  2. நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது. அதாவது திருச்செந்தூர். அது சுவாதிஷ்டானம்.
  3. யோகம் - யோக நிலையாகிய இன்பத்தைத் தருவது பழநி மலை; அது மணிபூரகம்.
  4. இத - இதமாக இருப்பது சுவாமிமலை. அது அநாகதம்.
  5. சல்லாபம் என்றால் மலைகள் தோறும் விளையாடுதல். குன்றுதோறாடல்; அது விசுத்தி.
  6. விநோதம் - பழமுதிர் சோலை - அது ஆக்ஞை.

உல்லாசம் என்றால் மூலாதாரம்; நிராகுலம் என்றால் சுவாதிஷ்டானம்; யோகம் என்றால் மணிபூரகம்; இதம் என்றால் அநாகதம்; சல்லாபம் என்றால் விசுத்தி; விநோதம் என்றால் ஆக்ஞை; இந்த ஆறு ஆதாரங்களில் எழுந்தருளியுள்ள பெருமானே! இதற்கெல்லாம் உரியவன் நீ அல்லவா? ஆகையினாலே, என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே! எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். உபதேசிப்பது எந்த இடமாக இருக்க வேண்டும்? 'யானோ மனமோ எனை ஆண்ட இடம்...'

Comments

Post a Comment