தியானமும் அன்பும் - OSHO

முக்தியடைவதற்கு சந்நியாசம் செல்வதுதான் வழி என்பது பல காலமாக இருந்து வரும் கருத்து. சமீபத்தில் என் தோழி ஒருத்தியும் கூட இதே பிரச்சினையை எழுப்பியிருந்தாள். சந்நியாசம் செல்வதில் ஆண்களுக்கே பல பிரச்சினைகள் இருக்கும்போது பெண்களுக்கு எப்படி முடியும். இதுதான் கேள்வி. இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது ஓஷோவின், 'ஓஷோ: மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர்' (LOVE AND MEDITATION) என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அதில் ஒஷோவிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்காக அவர் அளித்த பதில்தான் இது.

ஒஷோவிடம் கேட்கப்பட்ட கேள்வி, 'ஒரு ஆணின் உதவியின்றி ஒரு பெண்ணால் முக்தி அடைய முடியாதா?' என்பதுதான்.

ஓஷோ சொல்கிறார்........
அது சரிதான். ஆண்மையிலிருந்து வேறுபட்டது பெண்மை. இது ஒரு பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது. ஆண் ஒரு பெண்ணின் மூலமாகத்தான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவேதான் ஆன்மீகத்தில் நேர்மாறாக நடக்கிறது. ஒரு பெண் ஒரு ஆண் மூலமாகத்தான் முக்தி அடைய முடியும். அவர்களது உடலமைப்பு வேறுபடுவதைப்போல அவர்களது ஆன்மீக சக்தி வேறுபடுகிறது.

இது சமம் என்பதைப் பற்றியோ, சமமில்லை என்பதைப் பற்றியோ அல்ல. இது வேற்றுமை பற்றியது. பெண்கள் நேரிடையாக முக்தி அடைய முடியாது என்பதால் அவர்கள் ஆணைவிடத் தாழ்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வேறுபட்டவர்கள். இதுதான் உண்மையும்கூட. பெண்ணுக்கு நேரிடையாக முக்தி அடைவது ஏன் கஷ்டமாக இருக்கிறது. எப்படி ஆணால் முடிகிறது?

முக்தியை சென்றடைய அடிப்படையான இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று தியானம் மற்றையது அன்பு. அவற்றை தியான யோகம், பக்தி யோகம் என்றும் தியான வழி, பக்தி வழி என்றும் அழைக்கலாம். அடிப்படை வழிகள் இரண்டுதான்.

அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். தியானம் தனியே செய்யலாம். ஆண் தியானத்தின் மூலம் அடைய முடியும். அதனால்தான் அவனால் நேரிடையாக முக்தி அடைய முடியும். அவனால் தனியாக இருக்க முடியும். அவன் அடி ஆழத்தில் தனியாகத்தான் இருக்கிறான். தனிமை ஆணுக்கு இயற்கையாகவே வருகிறது. பெண்ணுக்கு தனியாக இருத்தல் மிகவும் கடினமானது. கிட்டத்தட்ட முடியாது எனலாம். அவள் முழு உயிரும் அன்பிற்கு ஆழமாகத் துடிக்கிறது. அன்பிற்கு இன்னொருவர் வேண்டும். அங்கு ஒருவரும் இல்லாமல் எப்படி அன்பு செய்ய முடியும்? அங்கு ஒருவரும் இல்லை என்றால் தியானம் செய்யலாம்.

பெண், பெண்மை அன்பின் மூலம் தியான நிலையை அடைகிறது. ஆண்மை தியானத்தின் மூலம் அன்பை அடைகிறது. புத்தர் மிகப் பெரிய அன்பு வெள்ளமாக மாறினார் தியானத்தின் மூலம்.

ஆண் இறைமையை அன்பின்மூலம் அடைய முடியாது. அவனது முழு சக்தியும் பெண்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதலில் அவன் தியான நிலையை அடைய வேண்டும். பின் அன்பு அவனுள் நிகழும். முதலில் அவன் இறைமையை அடைய வேண்டும். பிறகு அங்கு பிரச்சினை இல்லை. அவன் அன்பிற்குரியவரும் இறைமையாகி விடுவார்.

இதற்கு நேர் எதிரிடையானது பெண்ணுக்கு நடக்கிறது. அவளால் தியானம் செய்ய முடியாது. ஏனெனில் அவளது முழு உயிரும் அடுத்தவருக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது. அவளால் தனிமையாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ, அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள். அதனால் தனிமை ஒரு ஆனந்தம், தனிமையாக இருத்தல் களிப்பு என்று சொன்னால் ஒரு பெண்ணால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.

தனிமையாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஏனெனில் பல ஞானிகள் புத்தர், மகாவீரர், ஜீசஸ், முகம்மது எல்லோரும் ஆண்களே, இவர்கள் எல்லோரும் தனிமைக்குள் சென்றிருக்கின்றனர். இவர்கள் தனிமையில்தான் அடைந்திருக்கின்றனர். அவர்கள் அந்தக் கருத்தை உருவாக்கி விட்டனர்.

ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது வேதனையடைவாள். அவள் மனதிலாவது ஒரு காதலன் இருந்தால் அவள் மகிழ்ச்சியாயிருப்பாள். யாராவது அன்பு செய்தால், அவளைச் சுற்றி அன்பிருந்தால் அது அவளுக்கு ஊட்டமளிக்கும். அது ஒரு ஊட்டச் சத்து. அது ஒரு நுட்பமான உணவு. எப்போதெல்லாம் ஒரு பெண் அன்பில்லை என்று உணர்கிறாளோ அப்போது துன்புறுகிறாள், அவஸ்தைப்படுகிறாள். அவள் முழுமையும் சுருங்கி விடுகிறாள். அதனால் ஒரு பெண்ணால் தனிமை ஆனந்தமாயிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

பெண்மைதான் பக்தியையும் அன்பு வழியையும் உருவாக்குகிறது. இறைமை அன்புகூட இதை செய்ய முடியும். உடல் மூலம் அன்பு தேவை இல்லை. மீராவுக்கு கிருஷ்ணரேபோதும் என்பதைப்போல். அங்கு சிக்கல் இல்லை. ஏனெனில் அங்கு மற்றவர் உள்ளார். அவன் அங்கு இல்லாமல் இருக்கலாம். கண்ணன் ஒரு மாயையாக இருக்கலாம். ஆனால் மீராவுக்கு அவர் உள்ளார். அன்பிற்குரியவர் உள்ளார். மீரா மகிழ்ச்சியடைகிறாள், ஆடுகிறாள், பாடுகிறாள். அவள் வளர்கிறாள்.

மற்றவர் அங்கு இருக்கிறார் அன்பு செய்ய என்ற அந்தக் கருத்தே, அந்த எண்ணமே, அந்த உணர்வே பெண்ணுக்கு நிறைவை அளித்துவிடுகிறது. அவள் மகிழ்வுடன் துடிப்புடன் வாழ்வாள். இந்த அன்பில்தான் காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும் ஒன்று என்ற முடிவுக்கு அவள் வருவாள். பிறகு தியானம் நிகழும்.

அன்பில் ஒருங்கிணையும்போது மட்டும்தான் பெண்மைக்கு தியானம் நிகழும். பிறகு அவளால் தனிமையில் இருக்க முடியும். பிறகு அங்கு சிக்கலில்லை. ஏனெனில் இப்போது அவள் தனிமையாக இருக்க முடியாது. அவள் அன்பிற்குரியவர் அவளுடன் ஐக்கியமாகிவிட்டார். இப்போது அவர் அவளுள் இருக்கிறார். மீரா, ராதா, தெரசா எல்லோரும் ஒரு அன்பர் மூலமாகத்தான் அடைந்துள்ளனர்.

பெண்மை அன்பு செய்கிறது, அன்பின் மூலமாகத்தான் தியான நிலை, சமாதி, சமாதியின் முதல் நிலை வரும். மலரும். ஆனால் ஆழத்தில் வேரில் அன்புதான் இருக்கும். சமாதியின் முதல் அனுபவம் மலராக மலரும்.

எப்போது உண்மையைத் தேடும் பெண்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் இது நடக்கும். அவர்கள் அதிக அன்பை உணர்கிறார்கள். பிறகு உடல் துணையாக இருப்பவர்கள் திருப்தியளிப்பதில்லை. எப்போது அங்கு ஆழமான அன்பிருக்கிறதோ அப்போது உடல் துணையோடு திருப்தியடைய முடிவதில்லை. ஏனெனில் உடல் துணை வெளி வட்டத்தைத்தான் நிரப்ப முடியும். அவன் உள்ளே நிரப்ப முடியாது.

அதனால்தான் இந்திய போன்ற பழைமையான நாடுகளில் நாங்கள் காதலை அனுமதிப்பதேயில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணங்களைத்தான் அனுமதிக்கிறோம். ஏனெனில் ஒருமுறை காதலை அனுமதித்தால் உடல்துனை இப்போதோ, பிறகோ திருப்தியில்லாமல் போக நேர்கிறது. பிறகு அங்கு விரக்தி வரும்.

இப்போது மேலை நாடுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. அங்கு திருப்தி எங்கேயும் இல்லை. ஒருமுறை காதலை அனுமதித்தால் பிறகு சாதாரண ஆண் நிறைவளிக்க முடியாது. அவன் பாலுணர்வை பூர்த்திசெய்ய முடியும். மேல் மட்டத்தில் திருப்தி செய்ய முடியும். ஆனால் அவனால் ஆழத்தை நிரப்ப முடியாது. ஒருமுறை ஆழம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், ஒருமுறை ஆழத்தைக் கலைத்துவிட்டால் கடவுள் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வேறு யாராலும் முடியாது.

அதனால் உண்மையைத் தேடும் பெண்கள் என்னிடம் வரும்போது, அவர்களது ஆழம் அதிர்வுக்குள்ளாகிறது. அவர்கள் ஒரு புதிய துடிப்பை, ஒரு புதிய அன்பு உதயமாவதை உணர்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களது உடல்துணை திருப்திப்படுத்த முடிவதில்லை. இவர்களைவிட உயர்ந்த குணமுடைய உயிரால்தான் இந்த துடிப்பை திருப்திப்படுத்த முடியும். இது இப்படித்தான் இருக்கும்.

அதனால் கணவனோ, ஆண் நண்பனோ மேலும் உயர்ந்த இயல்புகளை உருவாக்கிக் கொள்ள மேலும் தியானத்தில் ஆழ வேண்டும். பிறகு மட்டுமே அவனால் நிறைவு செய்ய முடியும். இல்லாவிடில் இந்த உறவு முறிந்துவிடும். ஒரு புதிய துணையை தேட வேண்டியதுதான். அல்லது ஒரு புதிய துணையை கண்டுபிடிப்பது முடியாதது, கடினம் எனில் மீராவுக்கு ஏற்ப்பட்டதைப்போல் இறைமையின்மேல் அன்பு செலுத்த வேண்டியதுதான். பிறகு உடலைப்பற்றி மறந்துவிட வேண்டும். ஏனெனில் இது உனக்கானதல்ல.

உண்மையைத் தேடும் ஆண்களுக்கும் இதுவேதான். ஆனால் வேறு வழியில் நடக்கிறது. அவர்கள் மேலும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவதால் அவர்களுக்கும் பழைய துணைக்கும் உள்ள பாலம் உடைந்துவிடுகிறது. இப்போது அவர்களது துணையும் வளர்ந்தே ஆகவேண்டும். இல்லாவிடின் அந்த உறவைப் பராமரிக்க முடியாது.

நமது உறவுகள் எல்லாம், எந்த உறவாயிருந்தாலும் சரி எல்லாம் விட்டுக்கொடுத்தலே. ஒருவர் மாறினால் விட்டுக்கொடுத்தல் உடைந்துவிடும். அது நல்லதா, கெட்டதா என்பதல்ல பிரச்சனை. மக்கள் "தியானம் மேலும் உயர்ந்த பண்புகளை உருவாக்குமானால் பின் ஏன் இந்த உறவு முறிகிறது" என்று கேட்கிறார்கள். அதுவல்ல கேள்வி இரண்டு நண்பர்கள் உறவாக இருக்க வேண்டுமெனில் அங்கு விட்டுக்கொடுத்தல் வேண்டும், ஒருவர் மாறினால் மற்றவர் அவருடன் சேர்ந்து வளர வேண்டும். இல்லாவிடில் அங்கு சிக்கல் வரும்.

ஒரு ஆண் தியானத்தில் ஆழும்போது அவன் தனிமையை நாடுகிறான். அவன் மனைவி, காதலி இதனால் பாதிக்கப்படுகிறாள். அவள் புரிந்து கொள்ளாவிட்டால் பிரச்சனை உண்டுபண்ண ஆரம்பிக்கிறாள். இவன் தனிமையில் இருக்க விரும்புகிறான். அவள் புரிந்துகொண்டுவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால் அவள் அன்பு வளர்ந்தால்தான் அந்த புரிந்துகொள்ளுதல் அவளுக்கு வரும். அவள் மேலும் அன்பை உணர்ந்தாலானால் பிறகு அவளது துணைவனை தனிமையில் இருக்க அனுமதிப்பாள். அவன் தனிமையை பாதுகாக்கவும் செய்வாள். இதுதான் இப்போது அவளது அன்பாகும்.

ஒரு ஆணின் தியானம் வளருகிறபோதே பெண்ணின் அன்பும் வளரவேண்டும். அப்போதுதான் அவர்கள் இணைந்து இருக்க முடியும். மேலும் ஒரு உயர்ந்த இசைவும் அவர்களுள் ஏற்படும். மென்மேலும் அது உயர்ந்துகொண்டே செல்லும். ஆண் முழுமையாக தியானத்திலும் பெண் முழுமையாக அன்பிலும் இருக்கும் அந்த கணம் வரும்போது, மிகச்சரியான சந்திப்பு இருவரிடையே சாத்தியமாகும். வெறும் உடல், வெறும் காமம் மட்டுமல்லாமல் முழுமையானது சாத்தியம். இரண்டு இயற்கையின் கூறுகள் சந்தித்து தங்களுள் இரண்டறக் கலக்கின்றன.

Comments

Post a Comment